அமெரிக்க எல்லையில் நுழைந்த ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்க எல்லையில் நுழைந்த ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி அண்மையில் ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் வகையில் கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும் இந்த பின்னணியில் இரு நாடுகளிடையே உரசல் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த ஜூனில் அமெரிக்க ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டி வீழ்த்தியது. மேலும் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் வான்பரப்பில் வட்டமடித்து கொண்டிருந்ததால் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் கூறியிருந்தது. இதையடுத்து ஈரான் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி நேரத்தில் அதை நிறுத்தி விட்டதால் போர் மூலம் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும்  ஹுர்முஸ் நீர் இணை பகுதியில் ஈரானின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஹுர்முஸ் நீர் இணை பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் uss பாக்ஸர் போர்க்கப்பல் நுழைந்தப் போது அச்சுறுத்தும் விதமாக சுமார் 1000 மீட்டர்கள் தொலைவுக்கு நெருங்கி வந்த ஈரானின் ட்ரோன் தாக்கி அழிக்கப்பட்டதாக டிரம்ப்  கூறியுள்ளார். மேலும் சர்வதேச கடற்பரப்பில் செல்லும் கப்பல்களுக்கு ஈரானின் செயல்பாடுகள் அச்சுறுத்தலாகவும், ஆத்திரத்தை தூண்டும் வகையில் இருப்பதற்கு இது ஒரு உதாரணம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து எலக்ட்ரானிக் ஜாமிங் முறையில் ட்ரோன் நிலைகுலைய செய்யப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்காவின் இந்த ராணுவ ரீதியான நடவடிக்கையால் வளைகுடா மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே தங்கள் நாட்டு ட்ரோன் ஏதும் வீழ்த்தப்பட்டதாக தகவல் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமத் ஜாவத் ஷரீப் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை