நோபல் பரிசு பெற்ற பெண்ணை கேள்வியால் நோகடித்த டிரம்ப்

தினமலர்  தினமலர்
நோபல் பரிசு பெற்ற பெண்ணை கேள்வியால் நோகடித்த டிரம்ப்

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈராக்கை சேர்ந்த சமூக ஆர்வலர், நாடியா முராத்தின் பணிகள் பற்றி தெரியாமலேயே, 'உங்களுக்கு எதற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேள்வி கேட்டது, விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.


ஈராக்கை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், நாடியா முராத், 25. போரில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அந்நாட்டில், சிறுபான்மையினரான யாசிதி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக, தீவிரமாக போராடி வருபவர். ஈராக் மற்றும் சிரியாவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், 2014ல் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அப்போது, யாசிதி பெண்களை, பிடித்து சென்று, பாலியல் அடிமைகளாக நடத்தினர்.

ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நாடியா முராத், மூன்று மாதங்கள், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவரது தாயாரும், ஆறு சகோதரர்களும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிய நாடியா, ஐ.நா., முகாமுக்கு வந்து சேர்ந்தார். பின், யாசிதி பெண்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரது முயற்சியால், நுாற்றுக்கணக்கான பெண்கள், விடுவிக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐ.நா., அமைப்பின் துாதராகவும் முராத் பணியாற்றி வருகிறார். இவருக்கு, கடந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இந்நிலையில், அமெரிக்க அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், நாடியா முராத் நேற்று கலந்து கொண்டார். அப்போது, அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்த அவர், ஈராக்கில், 3,000 யாசிதி பெண்கள் காணாமல் போனது பற்றியும், தனது தாயார் மற்றும் ஆறு சகோதரர்கள் கொல்லப்பட்டது குறித்தும், டிரம்ப்பிடம் விளக்கினார். இதை கேட்ட டிரம்ப், ''நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள். மிகப் பெரிய சாதனை. உங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கினார்கள்,'' என, கேள்வி எழுப்பினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாடியா, ''இது ஒரு குடும்பத்தின் பிரச்னை அல்ல. பல்லாயிரக்கணக்கான பெண்களின் பிரச்னை. தயவு செய்து, நடவடிக்கை எடுங்கள்,'' என கேட்டுக் கொண்டார். நாடியா முராத்துக்கு எதற்காக அமைதி பரிசு வழங்கப்பட்டது என்பது கூட தெரியாமல், அவரிடமே அக்கேள்வியை கேட்ட, டிரம்ப்பின் செயலை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.

மூலக்கதை