குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச கோர்ட் நாளை தீர்ப்பு
தி ஹேக்: பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, 2016 முதல் சிறையில் வாடும் இந்தியர், குல்பூஷண் ஜாதவ், 46, வழக்கில், சர்வதேச நீதிமன்றம், நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்திய கடற்படையில் பணியாற்றி, ஓய்வுபெற்ற குல்பூஷண் யாதவ், தொழில் விஷயமாக, ஈரான் சென்றிருந்த போது, பாகிஸ்தான் உளவுப்படையினரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம், 2017ல் மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரியில், நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை வழக்கறிஞர், அப்துல்காவி அஹமது யூசுப், நாளை மாலை, இந்திய நேரப்படி, 6:30 மணிக்கு, தீர்ப்பு வழங்க உள்ளார். தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக, பாகிஸ்தான் ஏற்கனவே அறிவித்துள்ளது.