இலங்கையில் அனைத்துக் கட்சி கூட்டம்: சபாநாயகர் புறக்கணிப்பு

தினமலர்  தினமலர்

கொழும்பு: கடந்த மாதம் இலங்கை பார்லிமென்ட் கலைக்கப்பட்டதால், அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. அவற்றை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அதிபர் சிறீசேனா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.இலங்கை பார்லிமென்ட் பதவிக்காலம் நிறைவடைவதற்கு 20 மாதங்கள் இருந்த நிலையில், அதிபர் சிறீசேனா அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தார். இதையடுத்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிபர் சிறீசேனாவின் இந்த முடிவை நிராகரித்து தேர்தல் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டது.இதையடுத்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பார்லிமென்ட்டில் உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடியை துாவி வன்முறையில் ஈடுபட்டனர்.இந்நிலையில், இந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிபர் சிறீசேனா நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.இந்தக் கூட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணி கட்சி பங்கேற்கவில்லை. அந்த கட்சி அதிபருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், 'இந்த குழப்பங்களை தொடங்கிவைத்த நீங்களே இதற்கு முடிவை கொண்டுவர வேண்டும். மேலும், இந்தக் கூட்டத்தில் எதற்காக பங்கேற்க வேண்டும் என்று எந்த காரணமும் தோன்றவில்லை,' என்று தெரிவித்தது.மேலும், பார்லிமென்ட் சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் இந்த கூட்டத்தை புறக்கணித்தார்.

மூலக்கதை