பெட்ரோல் விலை உயர்வு : போராட்டத்தில் 400 பேர் காயம்
பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சில், பெட்ரோல் மீதான வரி உயர்வைக் கண்டித்து, மஞ்சள் நிற சட்டை அணிந்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, நடந்த வன்முறைகளில், 400 பேர் காயமடைந்துள்ளனர்.பிரான்சில், பெட்ரோல் மீதான வரிகள் சமீபத்தில் உயர்த்தப்பட்டன. தொடர்ந்து, பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, நேற்று முன்தினம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன. மஞ்சள் நிற சட்டை அணிந்து, முக்கிய சாலைகளை மறித்து, ஏராளமானோர், போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில், போராட்டக்காரர்களுக்கும், வாகனங்களில் வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில், 28 போலீசார் உள்பட, 400 பேர் காயமடைந்துள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.