இலங்கை துப்பாக்கிச் சூடு விவகாரம் கைதான அமைச்சர் விடுவிப்பு
கொழும்பு: இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைதான பெட்ரோலியத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்றிரவு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இலங்கையின் தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெட்ரோலியக் கூட்டு ஸ்தாபன தலைமையகத்திற்கு அருகில் கடந்த 28ம் தேதி, பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்தனர்.
இதில், 34 வயதான பெட்ரோலிய நிறுவன ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, அர்ஜூன ரணதுங்காவை கைது செய்ய வலியுறுத்தி, பெட்ரோலிய நிறுவன ஊழியர்களின் ஒரு சங்கத்தை சேர்ந்தவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
அதையடுத்து, நேற்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்காவை கொழும்பு குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர், நேற்றிரவு போலீசார் அவரை பிணையில் விடுவித்தனர்.
இதுகுறித்து, அமைச்சர் ரணதுங்கா கூறுகையில், ‘‘அமைச்சரவை தொடர்பாக நடந்த கூட்டத்தின் போது, மர்ம நபர்கள் என்னை தாக்க வந்ததால், பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது’’ என்றார்.