வீடு திரும்பிய கோடீஸ்வரர்
வீடு திரும்பிய கோடீஸ்வரர்
தார் எஸ் சலாம்: கிழக்கு ஆப்ரிக்க நாடான, தான்சானியாவைச் சேர்ந்தவர், முகமது டெஜி, 43; இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், ஆப்ரிக்காவின் இளம் கோடீஸ்வரராக திகழ்கிறார். இவரை, சமீபத்தில், தலைநகர் தார் எஸ் சலாமில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இந்நிலையில் நேற்று, முகமது டெஜி, பத்திரமாக வீடு திரும்பி உள்ளதாக, அவரது நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனில் வாக்காளர்கள் பலி
காபூல்: தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானில், நேற்று, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க, வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்த போது, பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில், ஏராளமான வாக்காளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்.
டியோ சீ ஹீன் - நிர்மலா சந்திப்பு
சிங்கப்பூர்: ஆசிய நாடான, சிங்கப்பூரில், பல்வேறு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ அமைச்சர்களை தனித்தனியாக சந்தித்து, இரு தரப்பு நட்புறவு குறித்து பேச்சு நடத்தினார். இந்நிலையில் நேற்று, சிங்கப்பூர் துணை பிரதமர், டியோ சீ ஹீனை சந்தித்து பேச்சு நடத்தினார்.