ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை : உலக சுகாதார அமைப்பு தகவல்

தினமலர்  தினமலர்

ஜெனிவா: பல்வேறு பிரச்னைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. உலக தற்கொலைத் தடுப்பு நாளை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பும், கனடாவின் மன நல ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இதில் வறுமை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில்தான் அதிகளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன. 2016ம் ஆண்டு அதிக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தால், 20 பேர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்.குடும்பப் பிரச்னை, மன உளைச்சல் என பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை அதிகம் கொண்ட நாடுகளில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ளும் முறை அதிகமாக உள்ளது.பணக்கார நாடுகளில் நடக்கும் தற்கொலைச் சம்பவங்களுக்கு பெரும்பாலும் மனநல பாதிப்பு, போதைப் பொருள் பழக்கம் போன்றவை காரணங்களாக அமைகின்றன. அந்த நொடியில் ஏற்படும் மன உந்துதலால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, மக்களின் மன நலனைக் காக்க நடவடிக்கை எடுப்பது போன்றவை தற்கொலைகளைத் தடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை