அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா விருப்பம்: அதிபர் ட்ரம்ப்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள இந்தியா விருப்பம்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா: வர்த்தகம் தொடர்பாக அமெரிக்கா பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரும் தங்களுடன் ஒப்பந்தம் போட விருப்பம் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப் பல நாடுகள் தற்போது அமெரிக்காவை மதிக்க கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகள் என்று தாங்களே கூறிக்கொள்வதாக கூறிய அவர், இதை சொல்லிக்கொண்டு அமெரிக்காவின் மானியத்தை பெற்றுக்கொள்வதாக கூறினார். இந்த மானியத்தை நிறுத்த போவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா 100% வரிவிதிப்பதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப் தற்போது தங்களுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள இந்தியா முன்வந்துள்ளதாகவும், வர்த்தக கொள்கைகள் கடுமையாக்கப்பட்டதே இதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் முந்தைய அரசுகளுடன் இந்தியா இதுபோல் பேசியது இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அமெரிக்கா - இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. புதிய மற்றும் சிறப்பான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த இந்தியா தரப்பில் அதிக ஆர்வம் காட்டப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை