பயங்கரவாதிகள் வெறிச்செயல் : ஆப்கனில் 37 வீரர்கள் பலி

தினமலர்  தினமலர்
பயங்கரவாதிகள் வெறிச்செயல் : ஆப்கனில் 37 வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள், 37 பேர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பாதுகாப்பு படையினரும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு, குந்துாஸ் மாகாணத்தின், தஸ்தி ஆர்ச்சியில் உள்ள சோதனைச் சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதற்கு, பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். எனினும், இந்த தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள், 13 பேர் உயிரிழந்தனர்.ஜாஸ்ஜான் மாகாணத்தில் உள்ள, காம்யாப் மாவட்டத்தில், போலீசாருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே, நேற்று, கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், எட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், எட்டு போலீசாரும் உயிரிழந்தனர்.இதற்கிடையே நேற்று, சமாங்கன், சாரி புல் ஆகிய மாகாணங்களில், போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், 16 போலீசார் உயிரிழந்தனர்.

மூலக்கதை