380,000 வங்கி அட்டை விவரங்கள் ஊடுருவல்: உறுதி செய்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ்
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸின் இணையத்தளம், தொலைப்பேசி செயலி ஆகியவற்றின் வாயிலாக பயணசீட்டு வாங்கிய வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதி தகவல்கள் அனைத்தும் ஊடுருவப்பட்டுள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 5ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயணசீட்டு வாங்கிய ஏறக்குறைய 380,000 வாடிக்கையாளர்களின் வங்கி அட்டை விவரங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஊடுருவப்பட்ட தகவல்களில் பயணம் மற்றும் கடப்பிதழ் விவரங்கள் உள்ளடங்கவில்லை என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
பாதிக்கப்பட்டதாக நம்பும் அனைத்து வாடிக்கையாளர்களும் அவர்களின் வங்கி அல்லது கடன் அட்டை நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் வலியுறுத்துகிறது.
ஊடுருவல் சம்பவத்தைக் குறித்து காவல் துறையிடம் புகார் கொடுத்துவிட்டதாகவும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டது.
நஷ்ட ஈடு குறித்து, வாடிக்கையாளர்களைத் தனித்தனியாக தொடர்புகொள்ளும் என்றும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
தற்போது, அதன் இணையதளம் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
ஊடுருவல் சம்பவத்தைக் குறித்து அதன் வாடிக்கையாளர்களிடம் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.