சர்ச்சைக்குரிய சட்டம் ஹாங்காங்கில் ரத்து

தினமலர்  தினமலர்
சர்ச்சைக்குரிய சட்டம் ஹாங்காங்கில் ரத்து

ஹாங்காங்:சீனாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹாங்காங்கில், சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்றச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அதை தற்காலிகமாக ரத்து செய்வதாக, அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்டை நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்படும், தன்னாட்சி பிரதேசம் ஹாங்காங். இங்கு, ஒட்டு மொத்த நிர்வாகத்தின் தலைவராக, கேரி லாம் என்பவர் செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் ஈடுபடுவோரை, சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில், கைதிகள் பரிமாற்றச் சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாக, ஹாங்காங் நிர்வாகம் சமீபத்தில் தெரிவித்தது.இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், பெரும் வன்முறை வெடித்தது. நாளுக்கு நாள், போராட்டத்தின் தீவிரம் அதிகரித்தது. இதையடுத்து, இந்த சட்ட திருத்தத்தை, தற்காலிகமாக ரத்து செய்வதாக, ஹாங்காங் நிர்வாகம் நேற்று தெரிவித்தது.இது குறித்து, ஹாங்காங் நிர்வாகத் தலைவர், கேரி லாம் கூறியதாவது:கைதிகள் பரிமாற்றச் சட்ட திருத்தத்துக்கு, ஹாங்காங் மக்களில் பலர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்ட திருத்தம், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி விடும் என, அவர்கள் கூறுகின்றனர். இதற்காக நடந்த போராட்டங்களால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் நடைமுறை, தற்காலிகமாக கைவிடப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை