முத்தமிழ் விழாவில் முனைப்பான சிறப்புப் பேச்சு! -ஏ.பி.ராமன்.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
முத்தமிழ் விழாவில் முனைப்பான சிறப்புப் பேச்சு! ஏ.பி.ராமன்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 24ம் ஆண்டு முத்தமிழ் விழா, சத்தான அம்சங்களுடன் இன்று மாலை மேடை ஏறியது. சிறப்பு விருந்தினர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு.முஹமது இர்ஷாத் சிறப்பாகப் பேசினார். சிறப்புரை வழங்கிய முனைவர் சுபாஷிணியின் பேச்சு, நமக்குமுற்றிலும் புதிய சுவையான அனுபவம்! பாலர் பள்ளியிலிருந்து பல்கலை வரை மாணவக் குழந்தைகளின் மாறுவேடப் போட்டி, மழலை மாறாப் பிள்ளைகளின் திருத்தமான கதை சொல்லும் திறன், சிறுகதை முயற்சிகள்....அத்தனை பேருக்கும் கணிசமான ரொக்கப் பரிசுகள் ! கழகம் அசத்திவிட்டது.

 

இந்த ஆண்டு தமிழவேள் விருது, சிங்கை எழுத்துலகில் பல சாதனைகளை செய்த மதிப்புமிகு எம்.கே.நாராயணனுக்குத் தரப்பட்டது. அவர் சார்பில் அவரது மனைவியாரும், மகன் பேராசிரியர் கணபதியும் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையில் பெற்றுக் கொண்டனர்.

 

செல்வி அமிர்தாவின் தமிழ் வாழ்த்துடனும், சிற்பி நடனக் குழுவினரின் நடனத்துடனும் விழாவின் வரவேற்புரையை சுப.அருணாசலம் துவக்கினார். தலைவர் நா.ஆண்டியப்பன் தன் தலைமைஉரையில், சிங்கையின் 200ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடைபெறவுள்ள நிகழ்ச்சிச் சிறப்புகளை அறிவித்தார். 200 தமிழ் அறிஞர்களைப் பற்றிய நூல் ஒன்று வெளியாக இருப்பதை வெளிப்படுத்தினார்.

 

திரு.முஹமது இர்ஷாத் மொழி வளர்ப்பில் நம் பங்கை தெளிவுபடுத்தினார். தமிழில் பேசுங்கள்-உங்கள் செல்வங்களை தமிழில் பேச வையுங்கள்-இளைய சமுதாயத்திடம் தமிழைக் கொண்டு சேர்க்க ஒன்றுபட்டு உழைப்போம் என்று அந்த இளைய நாடாளுமன்ற உறுப்பினர் நினைப்பூட்டினார். குறுகிய காலத்தில் நிறையப் பேசுகிறார்-நன்றாகப் பேசுகிறார். பரிசுபெற்ற கிட்டத்தட்ட 60 பேருக்கு வெள்ளி 700லிருந்து பலவகை மதிப்பில் பரிசுகளாகப் பெரும் தொகையை அள்ளித் தந்ததைப் பாராட்டவே வேண்டும். சுப.அருணாசலத்துடன் மோனாலிசாவும் இணைந்து படைத்த நெறிமுறை கச்சிதம்.

 

கிருத்திகா இனிய குரலில் நன்றி கூறினார். அனைவருக்கும் நன்றி கூறிய அவர் என்னையும் விட்டுவைக்கவில்லை. அத்துடன் எனக்கு ‘முகநூல் மன்னர்’ என்ற பட்டம் வேறு! நன்றி .

 

பினாங்கிலிருந்து கிளம்பி ஜெர்மனியில் குடியேறி உலகம் முழுவதும் தமிழ் வளர்ந்த ஆதிக் கதையை ஆய்வு செய்து வரும் ஒரு மங்கை தான் இன்று சிறப்புப் பேச்சாளர். முனைவர் சுபாஷிணி ஒரு மணி நேரம் சோ எனப் பெய்யும் மழையாக, இனிய குரலில், அர்த்தமுள்ள ஆய்வுக் கருத்துக்களை அழகாகக் கொட்டித் தீர்த்தார். ”தமிழ் மற்ற மொழிகளிலிருந்து வித்தியாசமானது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத் தொடர்பு கொண்டது. தூரக் கிழக்கு நாடுகளில் கடல் வழிப் பயணம் செய்து தன்னை வேரூன்றிக் கொண்டது. போர்த்துகீசியர்களிலிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் தமிழகம் பற்றிப் பேசியிருக்கிறது.அதன் மொழி, கலை, கலாசாரத்தில் அக்கரை காட்டியது....சுபாஷிணி தடம் புரளாமல், தமிழ் அன்னியர் கையில் வளர்ந்து பெருமை கண்டதை பெருமையோடு குறிப்பிட்டார்.

 

கத்தோலிக்க கிருஸ்துவம் தமிழை வளர்த்த பாங்கு, கார்டிலா போன்றோர் தமிழோடு கூடிய மூன்று மொழி நூல்களை எழுதியது, தூத்துக்குடியில் மதம் மாறியவர்களுக்கு நூல்கள், கொல்லத்தில் தம்பிரான் வணக்கம் வழி அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ் நூல், புள்ளி இல்லாமலே எழுதப்பட்ட தமிழ் நூல்கள், ஐரோப்பிய மண்ணில் தமிழ் முதல் பிரதிகள் பரவிய விதம், அந்த நாடுகளில் தமிழ் நாட்டிலும் இல்லாத ஆவணப் பதிவுகள்,வீரமாமுனிவரின் வழி பரவிய தமிழ், லூத்ரேயன் ஜெர்மன் குருமார்கல் தமிழைப் பரப்பிய விதம், இந்தியா என்ற நாட்டின் பெயரே இல்லாமல், மலபார், தழிழ் நாடு என அன்றைய ஆய்வாளர்கள் ஐரோப்பாவில் கையாண்டது.....மூச்சு விட நேரமின்றி முனைவர் சுபாஷிணி அள்ளிக் கொட்டிய தகவல்கள் அனைத்தும் ஆதித் தமிழை ஆசையோடு அசை போட்ட மதக் குருக்களை நம் நினைவுக்குக் கொண்டு வந்தன.

 

தமிழர்கள் காட்டுபிராண்டிகள் அல்லர்-அவர்களின் ஆசாரக் கோவையும், மற்ற பல நூல்களும் தனி மனித ஒழுக்கங்களையும், உணவு முறைகளையும் , மூலிகை போன்ற மருத்துவ முறைகளையும் போதிப்பவை என அவர்கள் மேனாட்டில் முழங்கியவர்கள் என்பதை சுபாஷிணி கூறினார். 1740ல் தமிழுக்கு ஜெர்மன் இருக்கை தந்தது. நாம் கேட்கிறோமே தமிழ் சோறு போடுமா என்று - அன்றே ஜெர்மனிக்கு தமிழ் சோறு போட்டது என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே குரல் எழுப்பினார்.ஜெர்மன் சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடித்தாலும், தமிழை விடப்பிடியாக உயர்த்தி வருகிறது. தமிழ் ஓலைகள் இந்தியா அல்லாத பிற நாட்டு நூலகங்களில் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்திய முனைவர், திருக்குறள் முதன் முதலில் லத்தீனில் முதல் அச்சு உருவில் வெளியானதையும்,ஐரோப்பிய நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறள் போற்றிப் புகழப்பட்டதையும் சுவைபடக் கூறினார். முனைவர் சுபாஷினியின் இன்றைய பேச்சு எந்தக் கோணத்திலும் சுவை குறையாத ஒன்றாகும். அவரின் இனிய குரலும், முறையான சொல்லாட்சியும் களை கட்ட வைத்தன.

 

ஏ.பி.ராமன்.

சிங்கப்பூர்

மூலக்கதை