அமெரிக்காவில் தமிழர்கள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அமெரிக்காவில் தமிழர்கள்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்களில் தமிழர்கள் வசிக்கிறார்கள். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளிலிருந்து வந்துள்ள தமிழர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, கணிப்பொறி , தொழில் , கல்விப்பணி என்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் பெருமையுடன் பங்களிக்கிறார்கள். 2016 அமெரிக்க புள்ளியியல் துரையின் கணக்குப்படி அமெரிக்காவில் தமிழ் மொழியை பேசுவோர் எண்ணிக்கையின் அடிப்படையில் 25 ஆவது இடத்தில் உள்ளனர். இந்திய மொழிகளைப் பொறுத்தவரை இந்தி பேசுவோர் சுமார் 8.1 லட்சம் பேர், குஜராத்தி பேசுவோர் 4.1 லட்சம் பேர் , தெலுங்கு 3.7 லட்சம் பேர், பெங்காலி 3.2 லட்சம் பேர், பஞ்சாபி 2.9 லட்சம் பேர், தமிழ் பேசுவோர் 2,7 லட்சம் பேர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுறியும் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இங்கு தொடர்ந்து வசித்து ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு மேல் இருப்பவர்கள் கிரீன் கார்டு வாங்கியும், கிரீன் கார்டு வாங்கி ஐந்து ஆண்டுகள் கழித்து குடியுரிமை பெற்றும் வசிக்கிறார்கள். இங்கு ஒரு வேலை இருந்தால் வீடு,கார் உள்ளிட்ட அனைத்தும் கடனில் வாங்கமுடியும். அமெரிக்க பொருளாதாரம் சந்தைப் பொருளாதாரமாக இருப்பதால் அனைவரும் உழைக்கவேண்டும், கடன் அடைக்கவேண்டும், அனைத்தையும் சந்தை தீர்மானிக்கும் என்ற நிலையில் வாழ்வியல் இருக்கும். இலவசங்களோ, பெரிய உதவிகளோ அரசிடமிருந்து எதிர்ப்பார்க்க முடியாது. மீன் கொடுக்கமாட்டார்கள், மீன்பிடிக்க மட்டுமே சொல்லிக்கொடுப்பார்கள்.

தொழில் தொடங்குவது எளிது, வெற்றியும், தோல்வியும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தொழில் சிந்தனை, வியூகத்தை பொருத்து இருக்கும்.

கல்வி: பள்ளிக் கல்வியை அரசே சொல்லிக்கொடுக்கிறது. தனி மனிதர்களுக்கு மதிப்பு அதிகம். தனி மனித கருத்துகளுக்கு மதிப்பு அதிகம். அமெரிக்காவில் தமிழ் மொழியை 300-க்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகளும், பெற்றோர் குழுக்களும் வாரத்திற்கு ஒருநாள் சொல்லிக்கொடுக்கிறார்கள். இதற்கென பல்வேறு பாடத்திட்டங்கள் உள்ளன. பெரும்பாலும் மூன்று விதமான அமைப்புகள் தமிழில் பாடநூல்களை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அவரவர்களுக்கு எது விருப்பமோ படிக்கலாம். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தேர்வை எழுதுகிறார்கள்.

அமெரிக்காவின் முதல் மாநிலமாக வெர்சீனியா பொங்கல் பண்டிகைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது( https://lis.virginia.gov/cgi-bin/legp604.exe?171+ful+HJ573) . பல்வேறு மாநிலங்கள் முயற்சித்து வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறைந்தது ஒரு தமிழ்ச்சங்கம் இருக்கும். இவை பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பாகவும், மத்திய அரசிடம் வரிவிலக்கு பெற்ற அமைப்பாகவும் இருக்கும். தமிழ்ப்பள்ளிகள் பாடத்திட்டத்தை சொல்லிக்கொடுப்பதற்கும் , தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கும், தமிழ் சங்கங்கள் கலை, கலாச்சாரம் , மேடை வாய்ப்புகள், மொழி வளர்ச்சி, மக்களின் நலன் உள்ளிட்டவற்றையும் கவனம் செலுத்துவதிலும் ஈடுபடுகின்றன. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்க்க பெரும்பாலான தமிழ்ச்சங்க மேடைகள் பயன்படுத்தபடுகின்றன.

தாய்நாட்டைவிட்டு , உறவுகளை விட்டு புலம் பெயர்ந்து வசிப்பதால் தாய்மொழிப் பற்றும், ஊர் பற்றும் , நாட்டுப்பற்றும் அதிகம் இருக்கும். பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் கிராமப்புற வளர்ச்சி, ஏழை மாணவர்களின் கல்வி உதவி என்று பல்வேறு உதவிகளை தங்கள் அறிவையும், பொருளாதரத்தையும் கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள்.

அமெரிக்க அரசியல், நிர்வாகம், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில்கள் என்று பல்வேறு உயர் பொறுப்புகளில் தமிழர்கள் இன்று இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தமிழ் மேல் ஒரு ஆழ்ந்த பற்றும், இலக்கியம் , வரலாறு மேல் ஒரு ஈர்ப்பும் இருப்பதை காணமுடியும்.

உலகம் முழுதும் தமிழர்களின் கலை, இலக்கியம், அரசியல், சமூகத் தொண்டு, அரசு நிர்வாகம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் பலரை அழைத்து தங்கள் விழாக்களில் விருந்தினர்களாக சிறப்பித்து விருது வழங்கி பெருமை செய்வார்கள்.

அமெரிக்காவில் ஏராளமான சுற்றுலாத் தளங்கள் உள்ளன. குறிப்பாக அமெரிக்கா வரும் பலரும் நியூயார்க், வாசிங்டன் டிசி, புளோரிடா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பார்க்க விரும்புவார்கள்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஐம்பத்தைந்துக்கும் மேற்பட்ட பதிவு பெற்ற தமிழ்ச்சங்கங்கள் இணைந்து சூலை முதல் வாரத்தில் அதாவது சூலை 4-ந் தேதியை ஒட்டி வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (www.fetna.org) ஒருங்கிணைப்பில் பேரவை விழா எடுப்பார்கள். அதற்கு உலக நாடுகள் பலவற்றில் இருந்து தமிழர்கள் கலந்துகொள்வார்கள். இதில் தமிழ் தொழில் முனைவோர் கருத்தரங்கள் மிகவும் பிரபலமானது. இதற்கென அமெரிக்கத் தமிழ் தொழில் முனைவோர் அமைப்பு ஒன்றை நிறுவி (www.ateausa.org) நடத்திவருகிறார்கள். தொழில் வாய்ப்புகள், தொழில் தொடர்புகள் உள்ளிட்டவற்றிற்கு மிகவும் பயனுள்ள வகையில் இவற்றை நேர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் பேரவை விழாவில் நடத்துகிறார்கள்.

அமெரிக்கத் தமிழர்கள் இலக்கிய ஆர்வமும், மொழி ஈடுபாடும், தொண்டுள்ளமும் படைத்தவர்கள். உதாரணமாக மருத்துவத்துறையில் இருக்கும் இரு தமிழர்களின் தொடக்க நிதியில் ஹார்வார்டு தமிழ் இருக்கை ஆரம்பித்து இன்று உலக மக்களின் ஒத்துழைப்பிலும், தமிழ்நாட்டு அரசின் உதவியுடனும் சிறப்பாக நடந்தேறியுள்ளது. இது இன்று உலகின் பல தமிழ் இருக்கைகள் தொடங்க அடித்தளமாக அமைந்துள்ளது.

அமெரிக்கத் தமிழர்கள் கணவன்-மனைவி இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். பொருளாதரத்தில் வளமையாகவும் குழந்தைகளை உயர் நிலை எட்டும் கல்வியை வழங்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

அமெரிக்க நாட்டிற்கு விசுவாசமாகவும், அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அதே நேரத்தில் தான் பிறந்த நாட்டிற்கு தேவையான பொருளாதார தொண்டு உதவிகளையும், அறிவுசார் உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

மூலக்கதை