சீனாவின் விண்வெளி ஆய்வுகூடம் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சீனாவின் விண்வெளி ஆய்வுகூடம் பசுபிக் பெருங்கடலில் விழுந்தது

பெய்ஜிங்: சீனா கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி ‘டியான்காங்-1’ என்ற விண்வெளி நிலையத்தை லாங் மார்ச் 2 ராக்கெட் மூலம் விண்ணில் நிறுவியது. இதுதான் சீனாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கூடம் ஆகும்.

இந்த விண்வெளி மையம் தனது முக்கியப்பணிகளை 2013-ம் ஆண்டு, ஜூன் மாதம் முடித்துக்கொண்டது. இதன் பின்னர் அதன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘டியான்காங்-1’ தனது பணிகளை முடித்துக்கொண்டு செயலற்றுப்போய் விட்டது என சீனா, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந்தேதி அறிவித்தது.

இந்த விண்வெளி நிலையத்தின் பாகங்கள், இன்று  பூமியில் வந்து விழும் என்று விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர்.

அதன்படி,  விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் பசுபிக் கடலில் விழுந்ததாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். புவியின் மேற்பரப்பில் விண்வெளி ஓடத்தின் பாகங்கள் நுழைந்ததும் காற்றின் உராய்வால் தீ பிடித்து எரிந்து பசுபிக் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை