எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
நியூயார்க்: வடகொரியா போரை விரும்புகிறது என்றும் எங்கள் பொறுமைக்கு எல்லை உண்டு எனவும் வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை வடகொரியா சோதித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிரடியாக 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது.
அந்த நாட்டின், கில்ஜூ கவுண்டியில் நடத்தப்பட்ட இந்த அணுகுண்டு சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை ஆகும். இது கடந்த ஆண்டு நடத்திய சோதனையை விட அதிக ஆற்றல் வாய்ந்தது.
இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை உலக அரங்கை அதிர வைத்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியாவின் ஹைட்ரஜன் குண்டு சோதனைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை அமெரிக்கா நேற்று அவசரமாக கூட்டியது.
இந்த கூட்டத்தில் ஐ. நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி ஆவேசமாக பேசினார்.
அப்போது அவர், “வட கொரியா, போருக்காக வரிந்து கட்டுகிறது. ஆனால் அமெரிக்கா போரை திணிப்பதற்கு விரும்பவில்லை.
அதே நேரத்தில் அமெரிக்காவின் பொறுமைக்கும் எல்லை உண்டு” என்று கூறினார்.
அத்துடன், “வடகொரியா மீது மேலும் வலுவான தடைகளை விதிக்கிறபோது, அது பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு உதவும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
.