போரில் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கனுக்கு இந்தியா உதவ வேண்டும்: ட்ரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்கா மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், ‘தீவிரவாத இயக்கங்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும்.
ஆனால், தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால், அந்நாடு பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்கா நிதியுதவியாக அளிக்கிறது.
அதேநேரம், நாம் எதிர்த்துப் போரிட்டுவரும் தீவிரவாதிகளின் புகலிடமாக அந்நாடு விளங்குகிறது. இந்தநிலை உடனடியாக மாற வேண்டும்.
இல்லையெனில் தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய நிலைமை வரும்.
உள்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி, பாகிஸ்தான் அரசு அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நேரம் இது’ என பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்தார். மேலும் அவர் இந்தியா குறித்து பேசுகையில் ‘இந்தியாவுடனான உறவை மேம்படுத்த அமெரிக்கா விரும்புகிறது.
மேலும் இந்தியா, போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் உதவ வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.
.