வறுமை நிலைக்கு பயந்துவிடாதேதிறமை இருக்கு மறந்துவிடாதே...இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்
உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர் சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது. ஐ.நா., சபையால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. 'வறுமைக்கு முடிவு கட்டுவோம் : அமைதியான வழியில் சமூகத்தை இணைப்பது இதற்கான வழி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
எது வறுமை
அனைவருக்கும் உணவு, குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாதவர்கள் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகிறார்கள். வறுமை, பட்டினி வன்முறைக்கு வழிவகுக்கிறது. உலகில் ஏற்படும் மரணங்களில், அதிகம் வறுமையினால் தான் ஏற்படுகிறது. எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமையினால் இறப்பவர்கள் அதிகம்.
காரணம் என்ன
வறுமை தொடர்வதற்கு ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளன. அனைவருக்கும் கல்வி கிடைத்தால் வறுமை ஒழியும்.
100
உலகின் 119 நாடுகளில் நடந்த கருத்துக்கணிப்பின் படி, 2017ம் ஆண்டுக்கான பட்டினி குறியீடு வெளியிடப்பட்டது. இதில் 100வது இடத்தில் இந்தியா உள்ளது. வடகொரியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், மியான்மர் ஆகியவை கூட இந்தியாவை விட முந்தைய இடங்களில் உள்ளன. பட்டினி குறைவாக உள்ள நாடாக முதலிடத்தில் பெலாரஸ், இரண்டாவது இடத்தில் போஸ்னியா, மூன்றவாது இடத்தில் சிலி உள்ளன.
22
இந்தியாவில் 22.4 கோடி பேர் சர்வதேச வறுமை ஒழிப்பு கோட்டுக்கு கீழே உள்ளனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
87
உலகில் 87 கோடி பேர், உணவின்றி வறுமையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. இதில் 40 கோடி பேர் சிறுவர்கள். 160 கோடி பேர் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர்.
150
உலக மக்கள்தொகையில் பாதிபேரின் ஒருநாள் வருமானம் 150 ரூபாய்க்கு கீழ் உள்ளது. அதே போல 14 சதவீதம் பேரின் ஒருநாள் வருமானம் 75 ரூபாய்க்கும் கீழ் உள்ளது.