மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு : கார்த்திகேய சிவசேனாதிபதி

தினகரன்  தினகரன்

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தமிழகம் முழுவதும் 6வது தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்றன. மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா, திருச்சி, கோவை ஈரோடு என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். சென்னை மெரினாவில் நேற்று மட்டும் 10 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல் மதுரை, சேலம், கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். மேலும் பாரம்பரியத்தை காக்க இளைஞர்களல் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உலகம் பாராட்டும் வகையில் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக தமிழ்நாடு வேளாண்மை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிவசேனாதிபதி இன்று டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது ஜல்லிக்கட்டு தடை காரணமாக இந்தியாவில் 13 காளை இனங்கள் அழியும் நிலையில் உள்ளன என்று கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த  காங்கேயம் காளை ஆராய்ச்சி நிறுவனர் சிவசேனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். நாட்டு இன காளைகளை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் ஆனால் அடுத்த வருடம் உறுதியாக சொல்ல முடியாது என சேனாதிபதி கூறியுள்ளார். மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த வெற்றி பெற்றுள்ளது எனவும் சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை