மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

  தினத்தந்தி
மாமனார் வீட்டு விருந்தில் இறால் உணவு சாப்பிட்ட புது மாப்பிள்ளை திடீரென உயிரிழப்பு

விழுப்புரம், திருச்சி மாவட்டம் சீனிவாசாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மகன் சஞ்சீவ்ராஜ் (வயது 28). என்ஜினீயரான இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும், விழுப்புரம் அருகே கோலியனூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கோலியனூர் கூட்டுரோட்டில் உள்ள மாமனார் வீட்டுக்கு விருந்துக்கு சஞ்சீவ்ராஜ் சென்றார். அங்கு இரவு அவருக்கு இறால் உணவு பரிமாறப்பட்டதாக தெரிகிறது. அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சஞ்சீவ்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து சஞ்சீவ்ராஜின் தாய் கல்யாணி வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை