38 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதா? தபால் துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

தினமலர்  தினமலர்
38 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதா? தபால் துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்



சென்னை : கோவையில் தபால் அலுவலகம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கை, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில், 38 ஆண்டுகளாக இழுத்தடித்த தபால் துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அத்துறைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, கோவை மாவட்டத்தை சேர்ந்த லீமா ரோஸ் என்பவருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தபால் துறை சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

முடிவு



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், பி.வேல்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கை பொறுத்தமட்டில், தபால் துறையிடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, நிலத்தை ஒப்படைக்காமல் உரிமையாளர்கள் தங்கள் வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், பொதுப்பாதை இல்லாத ஒரு இடத்தில், தபால் அலுவலகம் கட்ட, கண்மூடித்தனமாக நில உரிமையாளர்களுடன் சேர்ந்து, தபால் துறை முடிவு செய்துள்ளது.

அலுவலகம் கட்ட திட்ட அனுமதி கோரி, விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் கட்டடத்துக்கு, பொதுப்பாதை இல்லாததால், அதற்கு இதுவரை திட்ட அனுமதியை பெற முடியவில்லை என்பதால், இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருத முடியாது. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அரசு பணிகளில் ஈடுபடுபவர்கள், கவனக்குறைவு, அலட்சியமாக நடந்து கொண்டால், இந்த நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

இழுத்தடிப்பு



இந்த வழக்கை பொறுத்தமட்டில், தபால் துறையின் திட்டம் தோல்வி அடைய காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, அத்துறையிடம் கவனத்துக்கு விட்டு விடுகிறோம்.

ஆனால், தபால் அலுவலகம் கட்டுவதற்காக, நிலம் கையகப்படுத்துதல்தொடர்பான ஒரு வழக்கை, தபால் துறை 1985 முதல் இழுத்தடித்து உள்ளது.

அதாவது, 1985 முதல் 2023 ஆண்டு வரை, 38 ஆண்டுகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில், பல்வேறு வழக்குகள் தொடர, அத்துறை செயல்பாடு காரணமாக அமைந்துள்ளது.

எனவே, தபால் துறைக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்.

இந்த தொகையை, தபால் நிலையம் கட்டும் திட்டம் தோல்வி அடைய காரணமான தபால்துறை அதிகாரிகளிடம்இருந்து வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை : கோவையில் தபால் அலுவலகம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கை, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில், 38 ஆண்டுகளாக இழுத்தடித்த தபால் துறையின் செயலுக்கு

மூலக்கதை