துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கம் : முன்னாள் வீரர் அதிருப்தி

புதுடெல்லி, 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மும்பையில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு கமிட்டியினர் கூடி ஆலோசித்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவும் தனது யோசனைகளை தெரிவித்தார். இதன் முடிவில் 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியல் வெளியிடப்பட்டது. டி20 கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டாக தொடக்க வரிசையில் அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில், டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டிருப்பதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் விளையாடினார். அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய டி20 அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். அந்த சூழலில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது. அத்துடன் அந்த அணியில் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் . இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இந்த விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இந்த முடிவு குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முகமது கைப் கூறியதாவது, துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவித்து இருக்கும் என்று நம்புகிறேன். பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும். என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
