மக்களை இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல - நயினார் நாகேந்திரன்

  தினத்தந்தி
மக்களை இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல  நயினார் நாகேந்திரன்

சென்னை,பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவும் இலவசங்கள், உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், திமுக மட்டும் எப்போதுமே மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக அதை சுட்டிக்காட்டி அரசியலை செய்கிறார்கள்.அதே சமயம், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத கட்சியாகவும் திமுக உள்ளது. இந்த நான்கு ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.காரணம், எப்போது பார்த்தாலும் பெண்களின் தன்மானத்தை சீண்டும் விதம் திமுக தலைவர்கள் மேடையில் பேசி வருகிறார்கள்."அம்மாவுக்கும், மகளுக்கும் ரூ.1000" என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். பின் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் "முகமெல்லாம் பளிச்சென்று உள்ளது, ரூ.1000 வந்ததா?" என்று பொதுக்கூட்டத்தில் கேலி செய்தார். "ஓசி பஸ்" என்று பெண்களைக் கொச்சைப்படுத்தினார் அமைச்சர் பொன்முடி இதே வரிசையில் தான் திமுக பேச்சாளர் தமிழர் பிரசன்னா தற்போது பேசியுள்ளார்.ஒரு வயது முதிர்ந்த பெண்மணி விலைவாசி ஏற்றத்தை சுட்டிக்காட்டும் போது, ஆளுங்கட்சியாக பொறுப்புணர்ந்து பேசாமல், மேடையிலிருந்தே ரூ.1000 பணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியும், இலவசமாக அரிசி வாங்குகிறீர்கள் அல்லவா என நக்கல் செய்தும் பேசியுள்ளார் திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா.இப்படி மக்கள் நலத்திட்டங்களை வழங்குவது போல் வழங்கிவிட்டு மக்களை யாசகர்கள் போல இழிவாகப் பேசுவது திமுகவிற்கு புதிதல்ல. இந்த ஆணவப் போக்குதான் அவர்களை 1977-லிலும் 2011-றிலும் தோற்கடித்தது.ஒருமுறை 12 வருடம், இன்னொரு முறை 10 வருடமென படுதோல்வியின் படுகுழியிலேயே 22 ஆண்டுகள் விழுந்து கிடக்க வைத்தது.இப்படி, இரண்டாவது முறை ஆட்சிக்கு வரமுடியாமல் அவர்கள் வீழ்வதே அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டதால்தான்!இதோ அந்தப் படுகுழி மீண்டும் வாராய் என அவர்களை அழைக்கிறது! அதற்கு முன், இவ்வாறான ஏளனப் பேச்சுக்களைப் பேசும் தனது கட்சிக்காரர்களின் மீது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்த்தபடி தான் இருக்கிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மூலக்கதை