30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு சர்வதேச எரிசக்தி கண்காட்சி; பெங்களூருவில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

தினகரன்  தினகரன்
30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு சர்வதேச எரிசக்தி கண்காட்சி; பெங்களூருவில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

பெங்களூரு: புதுப்பிக்கதக்க எரிசக்தி மேம்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச எரிசக்தி கண்காட்சியை பெங்களூருவில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். ஜி-20  எரிசக்தி   மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி கண்காட்சியை பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய எரிசக்தி அமைச்சகம் செய்துள்ளது. இதையொட்டி நேற்று பெங்களூரு-துமகூரு சாலையில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் மாநாடு தொடங்கியது. இதில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு மற்றும் கண்காட்சியில் இந்தியாவில் எதிர்க்கால எரிசக்தி மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக ‘‘இண்டிய எனர்ஜி வீக்-2023’’ என்ற பெயரில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று  காலை 11.30 மணிக்கு திறந்து வைத்து உரையாற்றுகிறார். கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.   30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 500க்கும் மேற்பட்ட எரிசக்தி துறை நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எரிசக்தி துறை தொடர்பாக தயாரித்துள்ள பொருட்கள், புதுப்பிக்கதக்க எரிசக்தி, காற்றலை எரிசக்தி, நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தும் மோட்டார் ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து  சோலார் சமையல் குக் டாப்பை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.  அதை தொடர்ந்து பசுமை கழிவு மூலம் இயக்கப்படும் வாகனங்களின் சேவையை பிரதமர் தொடங்கி வைப்பதுடன் பயோ டீசல் மூலம் வாகனங்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகை காரணமாக பெங்களூரு, துமகூரு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மூலக்கதை