கட்டாய மதமாற்றம் என்பது அடிப்படை உரிமை கிடையாது: ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

தினகரன்  தினகரன்
கட்டாய மதமாற்றம் என்பது அடிப்படை உரிமை கிடையாது: ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி: ஒருவர் மற்றொருவரை கட்டாய மதமாற்றம் செய்வது என்பது அடிப்படை உரிமை கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  ‘கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும்’ என்று கூறி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் முக்கியமான  பிரச்னையாகும். அது நாட்டில் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை பாதிப்படைய செய்கிறது. அதனால் கட்டாய மதமாற்றம் என்பது தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசின் உறுதியான நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள நீதிமன்றம் விரும்புகிறது என தெரிவித்த நீதிமன்றம், கட்டாய மதமாற்றம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என கடந்த 14ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் விதமாக முன்னதாக ஒடிசா, மத்தியப்பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகண்ட். உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அரியானா ஆகிய மாநில அரசுகள் ஏற்கனவே சட்டங்களை இயற்றி உள்ளது. அதேப்போன்று ஒன்றிய அரசும் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மற்றும் பொருளாதார சமூக ரீதியில் பின்தங்கி இருப்பவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதே நேரத்தில்ஒருவர் மற்றொருவரை கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் செய்வது என்பது அவரது அடிப்படை உரிமை கிடையாது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை