ஜெ.,வுக்கு வாரிசு இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்!

தினமலர்  தினமலர்
ஜெ.,வுக்கு வாரிசு இருந்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்!

திருப்பூர்: ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால், மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்,'' என, நீதிபதி ஆறுமுகசாமி பேசினார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய விசாரணை குறித்து பொது இடங்களில் பேசக்கூடாது. இருப்பினும், ஜெ., மரணம் தொடர்பான அறிக்கையில், எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்தீர்களே, நீங்கள் என்ன டாக்டரா; எப்படி இந்த முடிவுக்கு வர முடிந்தது என, சிலர் கேட்கின்றனர்.

இதய பிரச்னை இருந்தும், ஜெ.,வுக்கு 'ஆஞ்சியோ'வும், அறுவை சிகிச்சையும் ஏன் செய்யவில்லை என, கேள்வி எழுகிறது.

அவருக்கு இதயத்தில், கால்சியம் மற்றும் சிறிய துளை இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யலாம் என, மருத்துவமனையில் இருந்தவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மூன்று டாக்டர்கள், ஜெ.,வுக்கு, 'ஆஞ்சியோகிராம்' தேவை என்றனர்; ஒருவர் மட்டும், தேவையில்லை என்று கூறியதாக, எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில், டாக்டர் செரியன், கிரிநாத் ஆகியோர், ஜெ.,வை பார்த்ததற்கான அறிகுறியே இல்லை. ஸ்ரீதர் என்பவர், 'அவ்வாறு நான் கூறவே இல்லை' என, சாட்சி கூறினார்.

டாக்டர் மேத்யூ சாமுவேல், 'அறுவை சிகிச்சை வேண்டாம்' என கூறவில்லை என்று சாட்சி கூறியதன் அடிப்படையில் தான், எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்தேன்; அதற்காக, எய்ம்ஸ் மருத்துவமனையை நான் குறை கூறவில்லை.

'ஒரு பெண் இந்த உலகத்தை விட்டு செல்லும் முன், ஒரு உயிரை விட்டுச்செல்ல வேண்டும்' என்பது, ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியரின் பொன்மொழி.

அதன்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு வாரிசு இருந்திருந்தால், மருத்துவமனையில் மிகவும் உதவியாக இருந்திருக்கும்; மீதியை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ஜெ., மரணம் தொடர்பான ஆணைய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லுாரி விழாவில் நீதிபதி இவ்வாறு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாரிசு இருந்திருந்தால், மருத்துவமனையில் உதவியாக இருந்திருக்கும்,'' என, நீதிபதி ஆறுமுகசாமி பேசினார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம்

மூலக்கதை