உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

தினகரன்  தினகரன்
உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி

பவுரி: உத்தரகாண்டில் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களின் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். உத்தரகாண்டின் ஹரித்துவாரில் லால்தாங் நகரில் இருந்து பிரோன்காலில் உள்ள கண்டா கிராமத்தில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுமார் 50 பேர் பஸ்சில் புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் சிம்ரி வளைவில் பஸ் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இரவு முழுவதும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஆண்கள், பெண்கள் என 25 பேர் பலியானார்கள்.  20  பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்கள் உடனடியாக பிரான்கால், ரிக்னிகால் மற்றும் கோத்வாரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை