அரியானாவில் நாளை மறுநாள் அணி திரளும் எதிர்க்கட்சிகள்: பவார், நிதிஷ், தாக்கரே பங்கேற்பு

தினகரன்  தினகரன்
அரியானாவில் நாளை மறுநாள் அணி திரளும் எதிர்க்கட்சிகள்: பவார், நிதிஷ், தாக்கரே பங்கேற்பு

புதுடெல்லி: அரியானாவில் இந்திய லோக் தளத்தின் சார்பில் நாளை மறுநாள் நடைபெறும் பேரணியில் தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அரியானாவில் இந்திய லோக் தளம் கட்சியின்  நிறுவனரும், முன்னாள் துணை பிரதமருமான தேவிலாலின் 109வது பிறந்த நாள் விழா நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்த கட்சியின் சார்பில் இம்மாநிலத்தில் பிரமாண்ட பேரணி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும்படி பல்வேறு மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, இந்திய லோக் தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில், ‘‘ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்,” என்றார். தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, திமுக எம்பி கனிமொழி, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பேரணியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை