லாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்

தினமலர்  தினமலர்
லாட்டரி சீட்டை அனுமதித்து நாட்டை சுடுகாடாக்க வேண்டாம்

சென்னை :'லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டாம். மீண்டும் கொண்டு வந்தால் தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும்' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த போது தனியாரை நுழைய அனுமதித்து திட்டத்தையே சீரழித்தார்.ஒரு சீட்டின் விலை 10 ரூபாய்; பரிசு ௧ கோடி ரூபாய் என மக்களிடம் பேராசை துாண்டப்பட்டது. ஒரு ரூபாய்க்கு- ௧ லட்சம் மாதம் ஒரு முறை குலுக்கல் என்ற நிலை மாறி ஒரு நம்பர் லாட்டரி முதல் 50 விதமான லாட்டரி விற்பனை தமிழகத்தில் நடந்தது.

வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கள்ளநோட்டு அச்சடிப்பது போல அச்சிட்டு மக்களிடம் விற்றனர். அப்பாவி ஏழை மக்கள் லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும் வாழ்வையும் இழந்தனர்.கடந்த 2003 ஜனவரி மாதம் ஒரே கையெழுத்தில் ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை ஜெ.வை சேரும்.


இந்த சட்டத்திற்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள் உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்து தோல்வியை சந்தித்தனர்.இந்நிலையில் சந்தர்ப்பவசத்தால் தற்போது பதவியில் அமர்ந்துள்ள தி.மு.க.வின் 'விடியா அரசு' மக்களின் தலையில் மண்ணை வாரிக் கொட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஆட்சிக்கு வருவதற்கு முன் 'அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்கு தெரியும்' என்று கொக்கரித்தவர்கள் லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.தனியார் ஏஜன்ட்கள் கொள்ளை அடிக்கவும் அதன் வழியே ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்குமே லாட்டரி சீட்டு திட்டம் உதவும்.ஜெ. ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் அரசு கொண்டு வந்தால் தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும்.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

மூலக்கதை