நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில் 24 மணி நேரத்தில் 3,998 பேர் பலி?.. ஒன்றிய அரசின் குளறுபடி தகவலால் அதிர்ச்சி

புதுடெல்லி: கொரோனாவால் நேற்று முன்தினம் 374 பேர் இறந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,998 பேர் இறந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ‘நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,015 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,998 பேர் உயிரிழந்துள்ளனர். 36,977 பேர் குணமாகி உள்ளனர்.   சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

அதாவது, 4 லட்சத்து 7 ஆயிரம் பேர் இன்னும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மூன்று கோடியே 12 லட்சத்து 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 480 பேர் இறந்துள்ளனர். இதுவரை 3 கோடியே 3 லட்சத்து 90 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று வரை, 40 கோடியே 54 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 34 லட்சத்து 25 ஆயிரத்து தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுவரை 44 கோடியே 91 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மட்டும் 18. 52 லட்சம் கொரோனா மாதிரி சோதனைகள் செய்யப்பட்டன.

அதன் நேர்மறை விகிதம் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1. 33 சதவீதமாகவும், மீட்பு விகிதம் 97 சதவீதத்திற்கும் உள்ளது.



சிகிச்சை பெறுவோர் விகிதம் 1. 30 சதவீதமாக உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு 125 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல், இறப்புகள் கடந்த சில வாரங்களாக ஆயிரத்திற்கும் குறைவாகவும், கடந்த 4 நாட்களாக 500 பேருக்கும் குறைவாக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 3,998 பேர் தொற்றால் இறந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதே நேற்று முன்தினம் 374 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இறப்பு குறித்த புள்ளி விபரங்களை வெளியிடுவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது ஒரே நாளில் 3,500 பேர் கூடுதலாக இறந்ததாக தெரிவித்து இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


.

மூலக்கதை