தடுப்பூசி பற்றிய ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசி திட்டங்களுக்கும், உலக நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இ-வின் எனப்படும் மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலைதளத்தை கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இதில், ரகசியங்கள் காக்கப்படுகின்றன. இதனால், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்கள், கையிருப்பு நிலவரம், அவற்றை சேமித்து வைக்கும் தட்பவெப்ப நிலை போன்ற முக்கிய ரகசியங்களை, மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிடக் கூடாது. அப்படி சொல்வதாக இருந்தால். அதற்கு மத்திய சுகாதாரத் துறையின் முன் அனுமதியை பெற வேண்டும். தடுப்பூசி குறித்த இந்த தகவல்கள் வணிக நோக்கத்துக்காக தவறாக பயன்படுத்தப்படக் கூடும். அதை தடுக்கும் வகையில், மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு வெளிப்படையாக செயல்படுவதை தெரியப்படுத்தவே, கோ-வின் ஆப் மூலம் தடுப்பூசி குறித்த தகவல்கள் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.