உ.பி. மயானத்தில் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் கொரோனா சடலங்கள்!: பார்ப்பவர்களை பதறவைக்கும் அதிர்ச்சி காட்சி வெளியீடு..!!
லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலம் மயானம் ஒன்றில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் கும்பல் கும்பலாக எரிக்கப்படும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது. தேசிய விருதுப்பெற்ற திரைப்பட இயக்குனரும், பத்திரிகையாளருமான வினோத் கபிரி, தனது ட்விட்டர் பக்கத்தில் உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் உள்ள மயானம் ஒன்றில் ஏராளமான சடலங்கள் எரியூட்டப்படும் காட்சிகளை வெளியிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழக்கும் லட்சக்கணக்கானோருக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் வினோத் கபிரி வெளியிட்ட வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ், அதிர்ச்சி தரும் இந்த காட்சிகளை பார்க்கும் போதே கண்ணீர் வருவதாக குறிப்பிட்டுள்ளார். உத்திரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில், சடலங்கள் மொத்தமாக எரியூட்டப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை காலத்துக்கு நிகராக உத்திரப்பிரதேசத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பின் உண்மையான நிலவரத்தை உத்திரபிரதேச பாஜக அரசு மறைப்பதாகவும் நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.