திருப்பதி ஏழுமலையான் கோயில் கடைகளில் தீப்பிடித்து ஒருவர் கருகி பலி: மின்கசிவு காரணமாக தீ விபத்து?

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயில் கடைகளில் தீப்பிடித்து ஒருவர் கருகி பலி: மின்கசிவு காரணமாக தீ விபத்து?

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் உள்ள கடைகளில் நேற்று அதிகாலை  பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் கருகி பலியானார். கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருவதால், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வரக்கூடிய  பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 6 ஆயிரம் முதல் 9 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு வருகின்றனர்.  அவ்வாறு வரக்கூடிய பக்தர்களும் நேரடியாக சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவரவர் ஊர்களுக்கு சென்று  விடுகின்றனர். இதனால் திருமலையில் உள்ள கடைகளில் வியாபாரம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதனால் பல்வேறு கடைகள் மூடப்பட்டு உள்ளது.இதில் ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் ஏராளமான கடைகள் தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுவாமி படங்கள், வளையல்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள்,  வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் ஆஸ்தான மண்டபத்தின் கீழ் தளத்தில் மூடப்பட்டிருந்த ஒரு கடையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி அருகில் உள்ள கடைகளுக்கும் பரவியது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள்,  தேவஸ்தான அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சில மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். ஆனாலும், 3 கடைகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தேதமடைந்தது. தொடர்ந்து, வெப்பம் தணிந்த பிறகு உள்ளே சென்று  தீயில் கருகிய பொருட்களை வெளியே கொண்டுவரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள போட்டோ ஸ்டுடியோவில் தங்கியிருந்த மல்லி ரெட்டி  என்ற ஊழியர்  தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூடப்பட்டிருந்த கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலக்கதை