கொரோனா அச்சுறுத்தலால் ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைப்பு: மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
புதுடெல்லி: நாட்டில் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் சூழல் காரணமாக மே மாதம் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்களுக்கான ஒருங்கிணைந்த நுழைவு தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வானது ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான முதல் இரண்டு தேர்வுகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்து முடிந்தது. கடந்த மாதம் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். சுமார் 20லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். இதுவரை 12லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.