பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்ற மனநிலை கொண்ட உ.பி.முதல்வரிடம் எப்படி பெண்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியும்!: பிரியங்கா காந்தி விளாசல் ..!!

தினகரன்  தினகரன்
பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்ற மனநிலை கொண்ட உ.பி.முதல்வரிடம் எப்படி பெண்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியும்!: பிரியங்கா காந்தி விளாசல் ..!!

லக்னோ: உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்ற மனநிலை கொண்டவர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 காம கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 15 நாட்களுக்கு பின் உயிரிழந்தார். இந்த கொடூர கற்பழிப்பு சம்பவம் நடைபெற்று ஓர் ஆண்டு கடந்துவிட்டதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஓர் ஆண்டுக்கு முன்னர் இதே தினத்தில் ஹத்ராஸ் பகுதியில் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக உத்திரப்பிரதேச அரசு அவர்களை அச்சுறுத்தியதாகவும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஒரு மகளின் இறுதிச்சடங்கை நடத்த கூட அவரது குடும்பத்தினருக்கு அனுமதி பறிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இவ்வளவு கொடூரமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு அரசாங்கத் தலைவரிடமிருந்து எப்படி பெண்களுக்கான நீதியை எதிர்பார்க்க முடியும் எனவும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்திரபிரதேசத்தின் முதல்வர் பெண் விரோத மனநிலையின் சாம்பியன். பெண்கள் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்ற மனநிலை கொண்டவர் என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை