நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

டெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து மத்திய அரசு, அரசு நாளிதழில் வெளியிட்டது. விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின் போது மத்தியஅரசு விவசாயிகளை பாதுகாக்கும் வகையிலான வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. இதனை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் ஒன்றான அகாலிதளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாது அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத்கவுர் பாதல் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் வரலாறு காணாத வகையில் அமளியில் ஈடுபட்டனர். பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இம் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே வேளாண் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து மாநிலங்களவையிலும் மசோதா வெற்றி பெற்றது.பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேளாண் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து மத்தியஅரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

மூலக்கதை