நடிகை ராகிணி என்னிடம் இருந்து பலமுறை போதை பொருள் வாங்கினார்: நைஜீரியர் லூம் பெப்பர் வாக்குமூலம்
பெங்களூரு: கன்னட நடிகை ராகிணி தன்னிடம் இருந்து பலமுறை போதை மாத்திரைகள் வாங்கியதாக, நைஜீரிய நாட்டை சேர்ந்த லூம் பெப்பர் வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவில் கன்னட நடிகை ராகிணி போதை பொருள் விவகாரத்தில் கைதாகி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நடிகை நிகி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ராகிணியுடன் கைதான நைஜீரியாவை சேர்ந்த லூம் பெப்பர், வைபவ் ஜெயினிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ராகிணிக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக இந்த 2 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து ள்ளனர். லூம் பெப்பர் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் போதை மாத்திரைகளை, நடிகை ராகிணிக்கு பலமுறை வழங்கி இருக்கிறார். இது தவிர, தனது நண்பரான ரவி சங்கருக்கும் கொடுத்துள்ளார். இதற்கான ஆதாரங்களையும் லூம் பெப்பரிடம் இருந்து போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதேபோன்று வைபவ் ஜெயினிடமும் ராகிணி போதை மாத்திரைகள் வாங்கியுள்ளார். அதை ராகிணியும், ரவி சங்கரும் பங்கிட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த காரணங்களால், ராகிணிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதை பொருள் பழக்கம் மட்டுமின்றி, போதை பொருள் சப்ளையர்களுடனும் சேர்ந்து ராகிணி விற்பனையிலும்ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போதை பொருள் தடுப்பு பிரிவு கண்காணிப்பு பிரிவின் விசாரணை வளையத்திற்குள் ராகிணி கொண்டு வரப்பட்டுள்ளார்.ஒரே ஒரு தம் வாங்கி கொடுங்க...சிறையில் சிகரெட் கேட்டு தகராறு செய்த நடிகைகள்கன்னட திரையுலகில் வெளியான தண்டுபாளையா திரைப்படத்தில் நடிகர், நடிகைகள் கைதாகி சிறையில் அடைக்கப்படுவார்கள். அப்போது சிறை கைதிகள் அங்கிருந்த போலீசாரிடம் சிகரெட் வாங்கி பயன்படுத்தும் காட்சிகள் படமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், அதே போன்று போதை பொருள் வழக்கில் சிக்கி சிறையில் தள்ளப்பட்டுள்ள நடிகை சஞ்சனா கல்ராணி, திரைப்படப்பாணியில் சிகரெட் கேட்டதாக கூறப்படுகிறது. போதை பொருள் மற்றும் மதுபான பழக்கத்திற்கு அடிமையான சஞ்சனா, தற்போது எந்தவிதமான போதை பொருட்களையும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதே போன்று ராகிணியும், பல்வேறு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புகைப்பிடிப்பது மட்டுமின்றி பிற போதை பொருட்களையும் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது சஞ்சனா, ராகிணி இருவரும் சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் சிகரெட் தேவைப்பட்டுள்ளது. தினமும் பழக்கப்படுத்தி கொண்ட அவர்களால், சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால் சிறையில் உள்ள பெண் காவலர்களிடம் எப்படியாவது ஒரு சிகரெட்டிற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கெஞ்சியுள்ளனர். அதற்கு பெண் காவலர்கள் மறுப்பு தெரிவித்ததும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறை வட்டாரம் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.