நம்பகமான செய்திகளில் பத்திரிகைகளுக்கே முதலிடம்!

தினமலர்  தினமலர்
நம்பகமான செய்திகளில் பத்திரிகைகளுக்கே முதலிடம்!

மும்பை: நம்பகமான செய்தி களை தரும் ஊடகங்களில், பத்திரிகைகள் முதலிடம் பிடித்திருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஊடக ஆலோசனை நிறுவனமான, ஆர்மேக்ஸ் மீடியா, 17 மாநிலங்களில், நகர்ப்புறங்களைச் சேர்ந்த, 15 வயதிற்கு மேற்பட்ட, 2,500 பேரிடம், செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில் 'செய்திகளின் நம்பகத்தன்மை குறியீடு' ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர், பத்திரிகைகள் தான் நம்பகமான செய்திகளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, செய்திகளின் நம்பகத்தன்மை குறியீட்டில், பத்திரிகைகள், 62 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளன. வானொலி மற்றும் 'டிவி' செய்திகள், முறையே, 57 மற்றும் 56 சதவீதத்துடன், அடுத்த இரு இடங்களை பெற்று உள்ளன.


சமூக ஊடகங்களில், அதிக அளவில் உண்மைக்கு மாறான செய்திகள் வருவதாக, 61 சதவீதம் பேர் கவலை தெரிவித்து உள்ளனர். எனினும், சமூக ஊடகங்களில், 'டுவிட்டர்' செய்திகள் நம்பகத்தன்மையுடன் உள்ளதாக, 53 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனர், சைலேஷ் கபூர் கூறியதாவது: இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் போலிச் செய்திகள் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. பத்திரிகைகளுக்கு நிகரான நம்பகச் செய்திகளை, டிவிக்கள் தர வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாதது தான் பிரச்னை. 'டிஜிட்டல்' அல்லது சமூக ஊடகங்களால் பாரம்பரியமான பத்திரிகைகளுக்கு வரவேற்பு குறையும் என்ற கருத்தை, இந்த ஆய்வு தவிடு பொடியாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை