அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டல்: டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை: ‘டிக்-டாக்’ காதலனுக்கு வலை
திருமலை: டிக்-டாக் காதலன் வீடியோ எடுத்து மிரட்டியதால் டிவி நடிகை தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எஸ். ஆர்.
நகரில் வசித்து வருபவர் ஸ்ராவணி. தெலுங்கு டிவி சீரியல் நடிகை.
இவர் நேற்றிரவு குளியலறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை தட்டினர். திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர்.
ஸ்ராவணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து ஸ்ராவணியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் எஸ். ஆர். நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள்:
ஸ்ராவணி, கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்த தேவராஜ் என்ற இளைஞருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் பழகி வந்தார். பின்னர் இருவரும் நேரில் அடிக்கடி சந்தித்துள்ளனர்.
காதல் ஏற்பட்டது. வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது தேவராஜ், ஸ்ராவணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதுதவிர இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களையும் எடுத்துள்ளாராம்.
இதனை சில நாட்கள் கழித்து ஸ்ராவணியிடம் காட்டி, தேவராஜ் பணம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ராவணி, ‘நீ நல்லவன் என்றுதானே காதலித்தேன், நெருங்கி பழகினேன்.
இனிமேல் என்னை சந்திக்காதே’ என கூறி விரட்டியுள்ளார்.
ஆனால் தேவராஜ், ‘நான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் அந்தரங்க புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன்’ என மிரட்டியுள்ளார்.
வேறு வழியின்றி ஸ்ராவணி 1 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்று கொண்ட அவர், தொடர்ந்து ஸ்ராவணிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து ஸ்ராவணி கடந்த ஜூன் மாதம் எஸ். ஆர். நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் அவர் தற்போது தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்ராவணி தற்கொலைக்கு காரணமாக தேவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.