அயோத்தியில் ஆக. 5-ல் ராமர்கோவில் பூமிபூஜை விழா!: எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு அழைப்பில்லை...பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!!

தினகரன்  தினகரன்
அயோத்தியில் ஆக. 5ல் ராமர்கோவில் பூமிபூஜை விழா!: எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு அழைப்பில்லை...பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!!

லக்னோ: அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் ராமர்கோவில் பூமிபூஜைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷிக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை. கொரோனா பிரச்சனையை காரணம் காட்டி  பூமிபூஜை விழாவிற்கு பிரதமர் மோடி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவது உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே ராமர் ஜென்ம பூமி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர்கோவில் கட்ட வலியுறுத்தி 1990ம் ஆண்டு அப்போதைய பாரதிய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி மிகப்பெரிய ரதயாத்திரை ஒன்றினை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணை இறுதியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், ரதயாத்திரை நடத்தி கோவில் கட்டுவதற்கு நீண்ட போராட்டம் நடத்திய அத்வானியை பூமிபூஜை நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணித்தது பாரதிய ஜனதா மூத்த தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீதும் குற்றச்சாட்டு உள்ளது. எனினும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள உமாபாரதிக்கு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை