மெகபூபா முப்தி தடுப்பு காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..!!

தினகரன்  தினகரன்
மெகபூபா முப்தி தடுப்பு காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்..!!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியை மேலும் 3 மாதங்கள் தடுப்பு காவலில் வைக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சலுகையை நீக்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அன்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் மெகபூபா முப்தியின் தடுப்பு காவல் வருகின்ற 5ம் தேதி முடிவடைகிறது. ஆனால் காவலை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜம்மு, காங்கிரஸ் ரவீந்தர் சர்மா தெரிவித்ததாவது, முன்னாள் முதல்வரை சிறையில் வைப்பது சட்டவிரோதம். காரணம் இல்லாமல் நீண்ட காலம் தடுப்பு காவலில் அடைத்து வைப்பது நியாயம் அல்ல. அவருக்கு நீதி மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டார். மெகபூபா மகள் இல்டிஜா முப்தி வெளியிட்டுள்ள செய்தியில், தமது தாயாருக்கு தடுப்பு காவல் நீட்டிப்பு பக்ரீத் பண்டிகை பரிசு என்றும் விமர்சித்துள்ளார். தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியை மேலும் 3 மாதங்கள் தடுப்பு காவலில் வைக்க மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு  சட்டத்தின் கீழ், இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரே அரசியல் தலைவர் மெகபூபா முப்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை