இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் ஒரே நாளில் 779 பேர் பலி: பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியது

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079 பேருக்கு கொரோனா  தொற்று பாதித்த நிலையில், 779 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 16 லட்சத்தை தாண்டியுள்ளது.

தளர்த்தப்பட்ட ஊரடங்கு அமலில் இருந்தும் கூட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 16,38,871 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 55,079  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக ஒரே நாளில் 779 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,57,806 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,45,318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5,999 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஒரு நாளில் மட்டும் 2,53,793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 16,812,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை 6,62,095 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,191 பேர் மரணம் அடைந்துள்ளனர்.



கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 59,629 பேர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 24,83,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகபட்சமாக கொரோனா தொற்றால் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை