பிரசாந்த் கிஷோர் ஆபீசுக்கு பூட்டு: தி.மு.க.,வில் திடீர் குழப்பம்

தினமலர்  தினமலர்
பிரசாந்த் கிஷோர் ஆபீசுக்கு பூட்டு: தி.மு.க.,வில் திடீர் குழப்பம்

சென்னை:தி.மு.க., - ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே நிலவும் பனிப்போரால், சென்னை, அண்ணா நகரில் உள்ள, 'ஐபேக்' அலுவலகம் மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன், தி.மு.க., தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான, 'ஐபேக்' நிறுவனத்தின் சார்பில், 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, களப்பணி துவக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வின், 'ஒருங்கிணைவோம் வா' செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆகியோருக்கு, பிரசாந்த் மீது கோபம் ஏற்பட்டது.

இது பெரிதாகி, 'ஐபேக்' நிர்வாகிகளுக்கும், ஐ.டி., அணி நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதலாக வெடித்தது. மேலும், ஐபேக் எடுத்துள்ள, சர்வே விவகாரமும் கோஷ்டி பூசலாக வெடித்துள்ளது.சமீபத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்திய, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், ஐபேக் நிர்வாகிகளின் செயல்பாடுகளை, மாவட்ட செயலர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், சென்னை, அண்ணா நகரில், எந்த நேரமும் இளைஞர்கள் பட்டாளத்துடன் இயங்கி வந்த, ஐபேக் அலுவலகம், திடீரென மூடப்பட்டுள்ளது.ஐபேக் தரப்பில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தான் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

மூலக்கதை