ராமர் பாலம் வழக்கு: 26 முதல் விசாரணை

தினமலர்  தினமலர்
ராமர் பாலம் வழக்கு: 26 முதல் விசாரணை

புதுடில்லி :'ராமர் சேது பாலத்தை, தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க கோரிய மனு, வரும் 26ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையே, கடல் வழி வர்த்தகம், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், வங்கக் கடலில், சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த, காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டது.

கடும் எதிர்ப்பு


வல்லுனர்களால் முன்மொழியப்பட்ட வழித் தடத்தில், கடலுக்கு அடியில், ஹிந்துக்களால் புனிதமானதாக கருதப்படும், ராமர் பாலம் இருப்பதால், இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.பா.ஜ., - எம்.பி.,யும், அந்த கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி, 2007ல், இந்த திட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

'ராமர் பாலத்தை இடித்தோ, அதற்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ, எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது' என, வாதிட்டார்.மேலும், ராமர் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரி, மனு தாக்கல் செய்தார்.இம்மனு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை அடுத்து, இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தை
நாடினார்.

மூன்று மாதங்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகும்படி, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன் பின், கொரோனா தொற்று பரவல் காரணமாக, நீதிமன்ற நடவடிக்கைகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தன. இந்நிலையில், தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமை யிலான அமர்வு முன், இந்த மனு நேற்றுவிசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, சுப்பிரமணியன் சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அவகாசம்



இதையடுத்து, தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டதாவது: இந்த மனுவை விசாரிக்க, அதிக அவகாசம் தேவைப்படுகிறது.நான், வரும் 23ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால், அவ்வளவு கால அவகாசம் என்னிடம் இல்லை.எனவே, புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள, என்.வி.ரமணா, 26 முதல், இந்த மனுவை விசாரிப்பார்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

மூலக்கதை