நாடாளுமன்ற வரலாற்றில் 2020ம் ஆண்டில் 33 நாட்கள் மட்டுமே நடந்த கூட்டத்தொடர்: கொரோனா அச்சத்தால் பணிகள் முடக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாடாளுமன்ற வரலாற்றில் 2020ம் ஆண்டில் 33 நாட்கள் மட்டுமே நடந்த கூட்டத்தொடர்: கொரோனா அச்சத்தால் பணிகள் முடக்கம்

புதுடெல்லி: கொரோனா தொற்று அச்சத்தால் நாடாளுமன்ற வரலாற்றில் கடந்தாண்டு 33 நாட்கள் மட்டுமே பட்ஜெட், மழைக்கால கூட்டத்தொடர் நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்காலக் கூட்டத்தொடரும் திட்டமிட்ட நாட்களில் நடக்கவில்லை.

கிட்டதிட்ட 31 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் 23 நாட்கள் மட்டுமே நடந்தது. மழைக்காலக் கூட்டத்தொடரும் 18 அமர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், 10 நாட்களோடு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் 2020ம் ஆண்டில் மாநிலங்களவை 33 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. மக்களவை 50 நாட்களுக்கும் குறைவாக நடந்துள்ளது.



குறைந்த நாட்கள் பட்டியலின்படி பார்த்தால், கடந்த 1999ம் ஆண்டில் 48 நாட்கள், 2004 மற்றும் 2008ம் ஆண்டில் தலா 46 நாட்கள் நடந்துள்ளன. கடந்தாண்டு 33 நாட்கள் நடந்தது தான், நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகக்குறைவு.

கடைசியாக 1984ம் ஆண்டில் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

ஒட்டுமொத்த நாடாளுமன்ற வரலாற்றை பார்த்தால், 1979 மற்றும் 1975ம் ஆண்டுகளில் குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலாளர் ஆய்வக புள்ளிவிபரப்படி, கடந்த 2020ம் ஆண்டில் மாநிலங்களவை 33 நாட்கள் மட்டுமே செயல்பட்டாலும், மசோதாக்களை அதிகமாக நிறைவேற்றி 82. 7 சதவீதம் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் மாநிலங்களவையில் 39 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில் வேளாண் மசோதா உட்பட 12 மசோதாக்கள் பட்ஜெட் கூட்டத்தொடரிலும், 27 மசோதாக்கள் மழைக்காலக் கூட்டத்தொடரிலும் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை