நீட் தேர்வு முடிவில் குளறுபடி முதல் மதிப்பெண் பெற்றவர் தோல்வி என அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நீட் தேர்வு முடிவில் குளறுபடி முதல் மதிப்பெண் பெற்றவர் தோல்வி என அறிவிப்பு

ஜெய்ப்பூர்: தேசிய தேர்வு முகமை வெளியிட்ட நீட் தேர்வு முடிவில் எஸ்டி பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தோல்வி அடைந்ததாக குளறுபடி நடந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்காபூரை சேர்ந்தவர் மிருதுல் ராவத் (17). இவர் நீட் தேர்வில் 720க்கு 329 மதிப்பெண் பெற்றதாக தேர்வு முடிவு வெளியானது. இதனால் அதிக மதிப்பெண்ணை எதிர்பார்த்த மிருதுல் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மறுமதிப்பீடு செய்யக்கோரி தேசிய தேர்வு முகமையிடம் விண்ணப்பித்தார். மறுமதிப்பீடு செய்த பின்னர் அவர் 720க்கு 650 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த மதிப்பெண் அடிப்படையில் அவர் எஸ்டி பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதன்காரணமாக தேசிய தேர்வு முகமை திருத்தப்பட்ட  பட்டியலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், முதலிடம் பிடிக்க வேண்டிய மாணவனை தோல்வி அடைந்ததாக தவறான தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை