மகாதேவர் கோயில் விழாவில் மிரண்டு ஓடிய யானை மீது அமர்ந்திருந்த பாகன் மின்கம்பத்தில் மோதி பரிதாப சாவு
திருவனந்தபுரம்: கோயில் திருவிழாவின்போது மிரண்டு ஓடிய யானை மீது அமர்ந்து இருந்த பாகன் மின் கம்பத்தில் மோதி பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் கோட்டயம் திருநக்கரையில் உள்ள மகாதேவர் கோயிலில் சிவன் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த யானையின் 2வது பாகனாக திருவனந்தபுரத்தை சேர்ந்த விக்ரமன் (24) பணியாற்றி வந்தார். இவருக்கு வரும் சனிக்கிழமை நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. நேற்று மாலை திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஐப்பசி திருவிழா நிறைவையொட்டி ஆறாட்டு ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் யானை மீது சாமி வீதி உலா நடந்தபோது யானை மீது பாகன் விக்ரமன் அமர்ந்து இருந்தார். திடீரென யானை மிரண்டு ஓடியது.
அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கோட்டயம்-குமரகம் ரோட்டில் ஓடிய யானை அந்த வழியாக வந்த பஸ்சை முட்டி தள்ளியது.
இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தது. யானை மீது அமர்ந்து இருந்த பாகன் விக்ரமன் யானைைய கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.
ஆனால் யானை கட்டுப்படாமல் மேலும் வேகமாக ஓடி ஒரு குறுகலான தெரு வழியாக சென்றது. அப்போது அங்கிருந்து மின் கம்பத்தில் யானை மோதியது.
இதில் யானை மீது அமர்ந்து இருந்த விக்ரமனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன்பிறகு விக்ரமனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் பாகன் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
.