மாடியில் இருந்து தவறி விழுந்தபோது ரிக்ஷாவில் விழுந்ததால் உயிர் தப்பிய குழந்தை
திகாமர்: மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை அவ்வழியே வந்த ரிக்ஷா மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், திகாமர் பகுதியில் உள்ள குறுகலான தெருவில் நேற்று சைக்கிள் ரிக்ஷா ஒன்றை ஒருவர் ஓட்டிச் சென்றார். அப்போது, அப்பகுதியில் உள்ள மாடியில் இருந்து திடீரென ஒரு ஆண் குழந்தை சைக்கிள் ரி்க்ஷா மீது விழுந்தது. சுமார் 35 அடி உயரத்தில் இருந்து விழுந்த அந்த குழந்தை ரிக்ஷா இருக்கை மீது விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பியது. இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. உறவினர்கள் வந்து அந்த குழந்தையை மீட்டு சென்றனர். மாடியில் இருந்து குழந்தை விழுந்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.