'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்'

தினமலர்  தினமலர்
பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்

புதுடில்லி : 'ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டி, முகலாய மன்னர் பாபர் செய்த வரலாற்று தவறை சரி செய்ய வேண்டும்' என, அயோத்தி வழக்கில், ஹிந்து அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை தினசரி விசாரித்து வருகிறது. விசாரணையின், 39வது நாளான, ஹிந்து அமைப்புகள் சார்பில், முன்னாள் அட்டர்னி ஜெனரலான, மூத்த வழக்கறிஞர், கே.பராசரன் வாதிட்டார். தன் வாதத்தின்போது, அவர் கூறியதாவது: முகலாய மன்னர் பாபர், போரில் வென்றார். அதன்பிறகு, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, பல்வேறு இடங்களில் மசூதிகள் கட்டினார்.

அவ்வாறு ஹிந்துக் கடவுள் ராமர் பிறந்த இடத்திலும் மசூதி கட்டி, அவர் வரலாற்று தவறு செய்துள்ளார். அந்தத் தவறை சரி செய்ய வேண்டிய நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது. அயோத்தியில் பல்வேறு மசூதிகள் உள்ளன; அங்கு முஸ்லிம்கள் வழிபடலாம். ராமர் பிறந்த இடத்தில் தான் ஹிந்துக்கள் வழிபட முடியும்; அதை மாற்ற முடியாது. அது ராமர் பிறந்த இடம்தான் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு, அவர் வாதிட்டார். இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை இன்று நிறைவு பெறுகிறது.

சிரிப்பை ஏற்படுத்திய அமர்வு


ஹிந்து அமைப்புகள் சார்பில் ஆஜரான பராசரன் வாதிட்டபோது, அமர்வு பல்வேறு கேள்விகளை அவரிடம் எழுப்பியது. 'இந்த நிலத்தில் மசூதி முன்பு இருந்தது. அதனால், அங்கு மீண்டும் மசூதி தான் கட்ட வேண்டும் என்று முஸ்லிம்கள் தரப்பில் கூறுகின்றனரே' என, அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதற்கு, 'அங்கு மசூதிக்கு முன் கோவில் இருந்தது. அதனால் கோவில் தான் கட்ட வேண்டும்' என, பராசரன் பதிலளித்தார்.

நேற்று முன்தினம் நடந்த வாதத்தின்போது, முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான ராஜிவ் தவான், 'இந்த நீதிமன்றம் எங்களிடம் தான் அதிக கேள்விகளை கேட்கிறது. ஆனால், ஹிந்துக்கள் தரப்பை கேள்வியே கேட்பதில்லை' என்று கூறியிருந்தார். அதை நினைவுபடுத்தும் வகையில், 'ஹிந்துக்கள் தரப்பையும் பல கேள்விகள் கேட்டுள்ளோம். இப்போது உங்களுக்கு சந்தோஷமா' என, ராஜிவ் தவானிடம் அமர்வு கேட்டது. அப்போது, நீதிமன்ற அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

மூலக்கதை