போக்குவரத்து விதிமீறல் 3 மாதத்துக்கு பழைய அபராதத் தொகை: ஜார்கண்ட் முதல்வர் உத்தரவு
ராஞ்சி: மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி சமீபத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்தது. ஆனால், அபாரத தொகை அதிகம் காரணமாக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.இந்நிலையில், ‘மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிகளை மீறுவோறுக்கான அபராதத் தொகையை தளர்த்திக் கொள்ளலாம்,’ மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் அபராதத் தொகையை குறைத்தும், தளர்த்தியும் உத்தரவிட்டு வருகின்றன. இதுவரை குஜராத், உத்தரகாண்ட், கர்நாடகா மாநிலங்கள் போக்குவித்து விதிமுறை மீறல்களுக்கான அபராதத் தொகையை குறைத்துள்ளன. உத்தரப் பிரதேச அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், ஜார்கண்ட் அரசும், வரும் டிசம்பர் வரை பழைய அபராதத் தொகையையே வசூலிக்க திட்டமிட்டுள்ளளது. இதன்படி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வரும் டிசம்பர் மாதம் வரை போக்குவரத்து விதிமீறல்களுக்கு பழைய அபராதத் தொகையே வசூலிக்கப்படும். இந்த கால கட்டத்தில் புதிய சட்ட திருத்தம் குறித்து மக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.